Ezekiel 15
எருசலேம் ஒரு பயனற்ற திராட்சைகொடி
1யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2“மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன? 3ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? 4அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ? 5முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது? 6“ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள். 7என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 8அவர்கள் எனக்கு உண்மையாய் இராதபடியினால், நான் நாட்டைப் பாழாய்ப் போகச்செய்வேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
Copyright information for
TamTCV