Isaiah 18
எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு
1எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால்,இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு!
2இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல்
கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது.
விரைந்து செல்லும் தூதுவர்களே,
உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும்,
தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள்.
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
3உலகத்தில் வாழ்பவர்களும்,
பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும்
மலைமேல் கொடியேற்றப்படும்போது,
அதைக் காண்பீர்கள்.
எக்காளம் முழங்கும்போது
அதைக் கேட்பீர்கள்.
4யெகோவா என்னிடம் கூறுவது இதுவே:
“சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும்,
அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும்
நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.”
5ஏனெனில் அறுவடைக்குமுன்,
திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது,
யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும்,
படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார்.
6அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும்,
காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்;
பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும்,
காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும்.
7உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து
சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும்.
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும்.
Copyright information for
TamTCV