Isaiah 20
எகிப்திற்கு எதிரான இறைவாக்கு
1அசீரிய அரசன் சர்கோன், தனது தர்த்தான் படைத்தளபதியை அஸ்தோத் பட்டணத்திற்கு அனுப்பினான். அவன் வந்து அதைத் தாக்கிக் கைப்பற்றிய வருடத்தில், 2யெகோவா ஆமோஸின் மகன் ஏசாயா மூலம் பேசினார்: அந்த வேளையில் அவர் ஏசாயாவிடம், “உனது இடுப்பில் இருக்கும் துக்கவுடையையும், உனது செருப்பையும் கழற்றிவிடு” என்றார். அவனும் அப்படியே செய்து உடையின்றி வெறுங்காலுடன் திரிந்தான். 3பின்பு யெகோவா சொன்னதாவது: “எனது அடியவன் ஏசாயா உடையின்றியும், வெறுங்காலுடனும் மூன்று வருடங்கள் திரிந்திருக்கிறான். இது எகிப்திற்கும், எத்தியோப்பியாவிற்கும் விரோதமான முன்னெச்சரிப்பும் அடையாளமுமாகும். 4இதேபோல் அசீரிய அரசன், எகிப்திய கைதிகளையும், நாடுகடத்தப்பட்ட எத்தியோப்பிய முதியோரையும் இளையோரையும் உடையின்றியும், வெறுங்காலுடனும், பின்பக்கம் மூடப்படாதவர்களாயும் கடத்திச் செல்வான். இவ்விதம் எகிப்து வெட்கமடையும். 5அப்பொழுது எத்தியோப்பியாவில் நம்பிக்கை வைத்து, எகிப்தைக் குறித்து பெருமை பாராட்டியவர்கள், பயந்து வெட்கத்துக்குள்ளாவார்கள். 6அந்த நாளிலே, இந்தக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ‘நாம் நம்பிக்கை வைத்தவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது பாருங்கள். அசீரிய அரசனிடமிருந்து விடுதலை பெறும்படி உதவிக்காக இவர்களிடமல்லவா ஓடினோம். அப்படியானால் நாம் எப்படித் தப்புவோம்?’ ” என்பார்கள்.
Copyright information for
TamTCV