Psalms 26
தாவீதின் சங்கீதம். 1யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும்,ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்;
நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன்,
நான் தடுமாறுவதில்லை.
2யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும்,
என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்;
3ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு
எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;
நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.
4ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை,
வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை;
5தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன்,
கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன்.
6யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி,
உமது துதியைப் பிரசித்தப்படுத்தி,
7உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு,
உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய,
நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன்.
9பாவிகளோடு என் ஆத்துமாவையும்,
இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும்.
10அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன;
அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன.
11ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்;
என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும்.
12என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன;
நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.
Copyright information for
TamTCV