Psalms 43
1இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்;இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய்
எனக்காக வழக்காடும்,
வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து
என்னைத் தப்புவியும்.
2ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை.
நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்?
பகைவனால் ஒடுக்கப்பட்டு,
நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?
3உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்;
அவை எனக்கு வழிகாட்டட்டும்.
நீர் குடியிருக்கும் இடமான
உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும்.
4அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்;
என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன்.
இறைவனே, என் இறைவனே,
யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன்.
5என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?
இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;
நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக
இன்னும் அவரைத் துதிப்பேன்.
Copyright information for
TamTCV