‏ Psalms 84

கித்தீத் என்னும் இசையில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

1சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது!
2என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக
ஏங்கித் தவிக்கிறது;
என் உடலும் உள்ளமும்
உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.
3என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
உம்முடைய பீடத்தினருகே
அடைக்கலான் குருவிக்கு வீடும்,
இரட்டைவால் குருவிக்குத்
தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே.
4உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள்.

5உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள்.
6அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில்,
அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்;
முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது.
7அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும்,
பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள்.

8சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;
யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும்.
9எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்;
நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும்.

10உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது,
வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது;
கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட,
என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன்.
11ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்;
யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்;
குற்றமற்றோராய் நடப்போருக்கு
அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை.

12சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
Copyright information for TamTCV